Published : 25 May 2021 08:14 PM
Last Updated : 25 May 2021 08:14 PM

செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வுக்கூடத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ஹெச்.எல்.எல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின்.

செங்கல்பட்டு

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மத்திய அரசின் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுக்கூடத்தினை ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வுக்கூடத்தினை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் நிறுவனமான ஹெச்.எல்.எல். பயோடெக் லிமிடெட் நிறுவனத்திற்கு உற்பத்தியைத் தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ. ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x