தி.மலை மாவட்டத்தில் ரூ.148.58 கோடியில்  7,42,911 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7,42,911 குடும்ப அட்டைதாரர்களுக்கு (97.65 சதவீதம்) ரூ.148 கோடியே 58 லட்சத்து 22 ஆயிரம் முதற்கட்ட கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் கரோனா நிவாரணத் தொகை ரூ.4,000 வழங்கப்படும் என, சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்தது. பின்னர், தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்குவதற்கான கோப்பில் முதல்வர் ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

பின்னர் அவரே, சென்னையில் இத்திட்டத்தை கடந்த 10-ம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பிறகு, மாவட்டங்களில் கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி கடந்த 15-ம் தேதி முதல் நடைபெறுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,627 நியாய விலைக் கடைகள் மூலமாக 7,60,743 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக தலா ரூ.2,000 நிவாரண உதவித் தொகை வழங்க ரூ.152 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கீழ்பென்னாத்தூரில் உள்ள நியாய விலைக் கடையில் கரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 வழங்கும் பணியைத் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கு, தினசரி 200 பேருக்கு தலா ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக நியாய விலைக் கடைகள் மூலமாக நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 7,42,911 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 என, மொத்தம் ரூ.148 கோடியே 58 லட்சத்து 22 ஆயிரம் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

97.65 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17,832 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடர்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் 100 சதவீதம் இலக்கை எட்டும் என்ற நம்பிக்கையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in