Last Updated : 25 May, 2021 05:34 PM

 

Published : 25 May 2021 05:34 PM
Last Updated : 25 May 2021 05:34 PM

'லாட்டரி சீட்டு நடத்தினால் அரசுக்கு கோடி, கோடியாக பணம் கொட்டும்': கார்த்தி சிதம்பரம் எம்.பி. யோசனை

காரைக்குடி

‘‘லட்டரி சீட்டு நடத்தினால் அரசுக்கு கோடி, கோடியாக பணம் கொட்டும்,’’ என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று நகராட்சி சார்பில் நடந்த தடுப்பூசி முகாமை அவர் பார்வையிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் லாட்டரி சீட்டு மறைமுகமாக விற்கப்பட்டு தான் வருகிறது. அதை அரசே விற்றால் கோடி, கோடியாக பணம் கொட்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை எளிய மாணவர்களின் மேல் படிப்புக்கும், தரமான மருத்துவ உதவிக்கும் பயன்படுத்தலாம்.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஏன் நான் கூட குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கவில்லை. அதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் இல்லை.

லாட்டரி சீட்டு வருமானம் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி, மருத்துவச் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம்.

அரசே லாட்டரியை விற்பனை செய்யலாம் என யோசனை கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனம் தான் நல்ல விடிவுக்கு அடித்தளம்.

மேலும் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்து புகார் அளிக்கச் செய்ய வேண்டும். கூச்சம், அச்சம் தான் பாலியல் தொந்தரவு குறித்து புகார் கொடுக்காததற்கு காரணம்.

புகார்களை உதாசீனப்படுத்தாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெச்.ராஜா போன்றோரின் தேவையில்லாத பேச்சுக்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது தான் முக்கியப் பிரச்சினை.

தமிழ கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் செயல்பட வேண்டும். இந்தியாவில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு 6 கோடி தடுப்பூசியை வெளிநாட்டிற்கு அனுப்ப பிரதமர் எடுத்த தன்னிச்சையான முடிவு தான் காரணம், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x