

நீர்பாசனத் திட்டங்கள் குறித்து இரண்டாம் நாளாக 16 மாவட்ட அலுவலர்களுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டாம் நாளாக தலைமைச் செயலகத்தில் இன்று 16 மாவட்ட அலுவலர்களுடன் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். நேற்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இரண்டாம் நாளான இன்று கோயம்புத்தூர் மண்டலத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள், சென்னை மண்டலத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை நீரேற்றம் மூலம் சரபங்கா வடிநிலப் பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர்வழங்கும் திட்டம், உலகவங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், கீழ்பவானி திட்டப்பகுதியில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம், நொய்யல் உப வடிநிலத் திட்டம், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் தத்தமஞ்சி ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டப் பணியின் முன்னேற்றம், செப்பனிடுதல், புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரிகள் புனரமைப்பு பணிகள், அணைகள் புனரமைப்புத்திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம், சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் இதர மாவட்டங்களில் நடைபெறும் நீண்ட கால வெள்ளத் தணிப்புத்திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
துறையின் தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் ஆகியோர், நீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் செப்பனிடப்படாமல் இருக்கும் நீர்நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கி திட்டப் பணிகளை செயல்படுத்திட ஆய்வு மேற்கொண்டு, விரைவில் அறிக்கை வழங்குமாறு நீர்வளத்துறை அமைச்சர் அறிவுரை வழங்கினார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.