வேலூர் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல சிக்கல் ஏற்பட்டால் தோட்டக்கலையை நாடலாம்
முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மாவட்டத்துக்குள்ளேயும், வேறு மாவட்டத்துக்கும் கொண்டு செல்ல ஏதேனும் இடையூறுகள் இருந்தால், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை நிர்வாகம் இன்று (மே 25) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழகத்தில் கரோனா 2-வது அலை அதிகரித்து வருவதை தடுக்க, மே 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி வகைகள், பழ வகைகள் தோட்டக்கலைத்துறை மூலமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
எனவே, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களான காய்கறி மற்றும் பழ வகைகளை மாவட்டத்துக்கு உள்ளேயும், பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம்.
அதன்படி, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் (வேலூர்) - 97867-31939, (காட்பாடி)- 70101-08291, (கே.வி.குப்பம்) - 87782-76335, (பேரணாம்பட்டு) - 98434-30656, (குடியாத்தம்)- 88381-50845, (அணைக்கட்டு) - 96006-23790, (கணியம்பாடி)-95856-85259 ஆகிய தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தயங்காமல் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்".
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
