Last Updated : 25 May, 2021 04:00 PM

 

Published : 25 May 2021 04:00 PM
Last Updated : 25 May 2021 04:00 PM

வேலூர் அருகே எரிந்த நிலையில் அட்டைப் பெட்டியில் குழந்தை உடல் மீட்பு

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே பச்சிளம் குழந்தை அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டு, எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் காவல் துறையினர் தரப்பில் கூறும்போது, ''வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு அருகாமையில் வைக்கோலுடன் அட்டைப்பெட்டி ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எரிந்த நிலையில் இருந்த அட்டைப்பெட்டியைப் பார்த்தனர்.

அதில், 2 நாட்களுக்கு முன்பு பிறந்த பச்சிளங் குழந்தையின் உடல் கருகிய நிலையில் இருப்பதைக் கண்டு, பொதுமக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வேலூர் கிராமிய காவல் நிலையத்துக்குப் பொதுமக்கள் தகவல் அளித்தனர்'' என்றனர்.

அதன்பேரில், அங்கு வந்த காவல் துறையினர் எரிந்த நிலையில் இருந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முறையற்ற உறவினால் பிறந்த குழந்தை என்பதால் எரித்துக் கொல்லப்பட்டதா ? அல்லது இறந்த குழந்தை எரிக்கப்பட்டதா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மேலும், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே கருகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்குள் அரசு மருத்துவமனையில் யாருக்கெல்லாம் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் தற்போது தாயாருடன் உள்ளனவா ?அல்லது யாராவது குழந்தையுடன் வெளியேறியுள்ளார்களா ? அவர்களின் பெயர், முகவரி ஆகிய விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த சம்பவம் வேலூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x