Published : 25 May 2021 11:58 AM
Last Updated : 25 May 2021 11:58 AM

முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: அரசிடம் என்ன திட்டம் உள்ளது?- உயர் நீதிமன்றம் கேள்வி

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக என்ன திட்டம் உள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தாக்கம் குறையும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை அளிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.ஐ.நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், அந்தத் திட்டத்தில் உறுப்பினரானால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மற்றவர்கள் அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சில தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சதவீதப் படுக்கைகள் ஒதுக்கி இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும், அதுகுறித்த முழு விவரங்களைத் தாக்கல் செய்வதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் பேர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்றவர்கள், குழு காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் அதிகம் சேர்ந்துள்ளதாகவும், இதில் சேராதவர்களும் படுக்கை பெற இயலாதவர்களும், தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு சிகிச்சை பெற முடியும் என்று அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை மே 31 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x