ஒடிசா - மேற்கு வங்கம் இடையே ‘யாஸ்’ புயல் நாளை கரையை கடக்கிறது: மீனவர்கள் 27-ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை

ஒடிசா - மேற்கு வங்கம் இடையே ‘யாஸ்’ புயல் நாளை கரையை கடக்கிறது: மீனவர்கள் 27-ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை
Updated on
1 min read

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை யாஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதுஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை பிற்பகலில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது:

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மே 24-ம்தேதி (நேற்று) காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘யாஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் வலுப்பெற்று, ஒடிசாவின் பாராதீப் - மேற்கு வங்கத்தின் சாகர்தீவு இடையே வரும் 26-ம் தேதி(நாளை) பிற்பகலில் கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக 27-ம் தேதி வரை தமிழக, ஆந்திர கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 26-ம்தேதி வடக்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 110 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 25, 26-ம் தேதிகளில் கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 28-ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in