Published : 25 May 2021 03:12 AM
Last Updated : 25 May 2021 03:12 AM
ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதை அடுத்து இன்றுமுதல் (மே 25)வரும் 29-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட்டில் பணியாற்றுகின்றனர். இவர்களில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 10 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிலாளர்கள் அனைவரும் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கை மீது நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும்தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுக்கு வைத்த கோரிக்கைக்கும் முறையான பதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் நேற்று பணிக்குச் செல்லாமல் தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். ஆலைநிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இன்றுமுதல் வரும் 29-ம் தேதி வரை 5 நாட்களுக்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதாக தொழிற்சாலை நிர்வாகம்அறிவித்தது. பின்னர் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT