

திருச்சி மாவட்டம் வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது காணாமல் போன இரு ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் உள்ள வனப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் சுடும் பயிற்சியில் ஈடுபடுவர். அங்கு கடந்த ஜனவரி 27-ம் தேதி கோயம்புத்தூர் மதுக்கரையில் உள்ள இந்திய ராணுவத்தின் பீரங்கிகள் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ராக்கெட் லாஞ்சர் சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த இரு லாஞ்சர் குண்டுகளை காணவில்லை என வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், தோகைமலை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கருங்கல்பட்டி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு குண்டும், மணப்பாறை காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மத்தகோடங்கிப்பட்டி கிராமத்தில் ஒரு குண்டும் இருப்பதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு வனத்துறையினர் தகவல் அளித்தனர். இதுகுறித்து கோயம்புத்தூர் பீரங்கி படைபிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.