Published : 25 May 2021 03:14 AM
Last Updated : 25 May 2021 03:14 AM

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: முன்னுரிமை அடிப்படையில் போடப்படுகிறது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்/திருவண்ணாமலை

வேலூர், தி.மலை மாவட்டங்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் பெருகி வரும் கரோனா தொற்றை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இதுவரை 1 லட்சத்து 91 ஆயிரத்து 762 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்துக்கு கோவாக்சின் தடுப்பூசி குறைந்த அளவில் வந்துள்ளதால் அந்த ஊசிகள் மட்டும் குறைந்த அளவில் போடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி அதிக அளவில் இருப்பு உள்ளதால் தற்போது கோவி ஷீல்டு தடுப்பூசியே பெரும்பாலோ னருக்கு போடப்பட்டு வருகிறது.

முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட காத்திருக்கின்றனர். மாநில சுகாதாரத்துறையினரிடம் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு கோவாக்சின் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படாததால் 2-வது தவணைக்கான காலம் நெருங்கி விட்ட நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 805 பேர் உள்ளனர். இவர்களுக்காக, முதற்கட் டமாக 18 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வேலூர் மாவட்டத் துக்கு வரப்பெற்றுள்ளன.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப் பட உள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன், மாநகர நல அலவலர் சித்திரசேனா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் உள்ள தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள், மருத்துவமனைகளில் உதவி செய்யும் தன்னார்வலர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களது பணி அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறையின் 04175-1077, 04175-233344, 04175-233345 ஆகிய எண்களிலும், 88707 00800 என்ற வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x