Last Updated : 24 May, 2021 08:57 PM

 

Published : 24 May 2021 08:57 PM
Last Updated : 24 May 2021 08:57 PM

மூத்த குடிமக்களுக்கு உதவ வேண்டும்: காவலர்களுக்கு கோவை மாநகரக் காவல் ஆணையர் அறிவுரை

கோவை மாநகரப் பகுதியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் உதவி செய்ய வேண்டும் என மாநகரக் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு இன்று (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் தலைமையிலான காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநகரில் காவல்துறையினர் ஊரடங்கு கண்காணிப்பின்போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

"ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், தங்களின் பகுதியில் உள்ள மூத்த குடிமக்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவ்வப்போது அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, அவர்களுக்குத் தேவையான உதவிகளை நிறைவேற்றிட வேண்டும். காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடுகளிலேயே டெலிவரி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பாஸ் விநியோகம்

சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்கள் போன்ற உதவிகளைச் செய்ய முன்வரும் நபர்களை, எவ்விதமான தொந்தரவு செய்யாமல் அவர்களின் உண்மைத் தன்மையை விசாரித்து, சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையர் அலுவலகத்திலோ அல்லது மாநகர நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்திலோ பாஸ் வழங்க வேண்டும்.

அத்தியாவசியத் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லும் நபர்களைச் சரியான முறையில் விசாரித்து அவர்களை அனுமதிக்க வேண்டும். சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகளைக் கண்டறிந்து அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

காவலர் குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தள்ளுவண்டியில் காய்கறிகள் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். அனைத்துக் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் முறையாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்துக் காவலர்களுக்கும் சுழற்சி முறையில் முறையில் 20 சதவீதம் ஓய்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x