

வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள யாஸ் புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்பகுதியை மே 26- ஆம் தேதி காலை சென்றடையும்.
இது வடக்கு ஒடிசா - மேற்கு வங்கத்தைக் கடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ம் தேதி மாலை அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
யாஸ் புயல் காரணமாக வங்கக்கடலில் காற்று வழக்கத்திற்கு மாறாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையிலும மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டிணம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.