Published : 24 May 2021 06:25 PM
Last Updated : 24 May 2021 06:25 PM

கரோனா ஊரடங்கில் விமானத்தை வாடகைக்கு எடுத்து நடுவானில் திருமணம்: ஸ்பெஸ்ஜெட் ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம்

மதுரை

கரோனா ஊரடங்கு காலத்தில் மதுரையில் இளம் ஜோடி விமானத்தை வாடகைக்கு எடுத்து நடுவானில் புதுமையாக திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானதால் அவர்கள் பயணம் மேற்கொண்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா முழுஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் அவசரவசரமாக நேற்று நடத்தப்பட்டது. மண்டபங்களில் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து திருமணங்கள் நடத்தினர்.

இதனால், ஆடம்பரமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த பலர் ஏமாற்றமடைந்தனர். நேற்று நடந்த இந்த அவரசர திருமணங்களில், மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மீனாட்சி ராகேஷ் - தீக்‌ஷனா தம்பதியினர் மதுரை விமானநிலையத்தில் விமானத்தை வாடகைக்கு எடுத்து நடுவானில் புதுமையாக திருமணம் செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்தனர்.

இதற்காக இந்த ஜோடியினர் இரு குடும்பத்தைச் சேர்ந்த 150 நபர்களுக்கு அழைத்துள்ளனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து 'நெகட்டிவ்' சான்றிதழ் பெற்று மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சிறப்பு விமானம் ஒன்றை பதிவு செய்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக விமானநிறுவனத்திற்கு ரூ.8 லட்சம் வரை வாடகைக் கட்டணம் செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பு விமானத்தில் இந்த ஜோடியினர், மதுரை மினாட்சியம்மன் கோவில் மேல் விமானம் பறக்கும்போது, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். விமானத்தல் சம்பிரதாயப்படி திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதற்காக புரோகிதர்கள் சிலர் அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. ஒரு புறமும் அதை பிரமிப்பாக பார்த்து அதிகளவு பகிரப்பட்டாலும், மற்றொரு புறம், இந்த நெருக்கடியான கரோனா ஊரடங்குகாலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும்நிலையில் இவர்கள் ஆடம்பரமாக விமானத்தில் நடுவானில் திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணத்தில் பங்கேற்க அதிகபட்சம் 50 உறவினர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கும் மேலான எண்ணிக்கையில் உறவினர்கள் அழைத்து சர்ச்சைக்குரிய வகையில் நடுவானில் திருமணம் செய்தது அரசின் கரோனா தடுப்பு விதிகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. விமானத்தில் பயணம் செய்த பலரும் முகக்கவசம் அணியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து துறை இயக்குநரகத்தின் (directorate general of Civil Aviation) கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், விசாரணை நடத்தி திருமணம் நடந்த விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்தது. மதுரையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை விமானநிலைய உயர் அதிகாரியிடம் கேட்டபோது, விமானத்தில் திருமணம் செய்வது சம்பந்தமான தகவல் விமானநிலைய அதிகாரிகள் கவனத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. மேற்கொண்டு விசாரணை நடப்பதால் இதைப் பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x