Last Updated : 24 May, 2021 04:15 PM

 

Published : 24 May 2021 04:15 PM
Last Updated : 24 May 2021 04:15 PM

தைவானிலிருந்து ஓரிரு தினங்களில் தமிழகத்துக்கு திரவ ஆக்சிஜன் வரத்து: அமைச்சர் தங்கம் தென்னரசு

தைவானிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்களில் திரவ ஆக்சிஜன் இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் 535 நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. விற்பனை விலையை கண்காணிக்க திட்ட அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகின்றன. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 120 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகமாக இருப்பதினால் அங்கும் கரோனா பாதுகாப்பு மையங்கள் படுக்கை வசதிகளுடன் புதியதாக ஏற்படுத்தப்படவுள்ளது. நோய்த்தொற்று பரவாமல் தடுப்பது குறித்து கண்காணிக்க கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

காய்கறி விற்பனையை கண்காணிக்க வட்டார அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக வேளாண்மைத்துறை வணிவரிதுறை குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மினி ஆட்டோ செல்லமுடியாத இடங்களிலும் காய்கறி உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காய்கறி விற்பனையை தொடர்ந்து மளிகை தொகுப்பு வழங்குவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் ஊரடங்கு குறித்து அச்சபட தேவையில்லை.தேவையான அத்யாவசிய பொருட்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் வருவதை முன்கூட்டியே கண்டறிய திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி தட்டுபாடு இல்லை.

இறப்பு விகிதித்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டுவருகிறது.

மக்கள் மனதில் தடுப்பூசி செலுத்துவதற்கான தயக்கம் இருந்துவருகிறது. இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே சீனாவிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 திரவ ஆக்சிஜன் கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் திட்டமிட்டபடி சென்னைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இதுபோல் சிங்கப்பூரிலிருந்து 1500 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கப்பல் மூலம் விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவை சென்னைக்கு நாளை வந்தடையும்.

மேலும் தைவானிலிருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டுவரப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து ரெட்டியார்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் வழங்கினார். மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள தாமரைச்செல்வி கிராமத்துக்கு சென்று நடமாடும் மருத்துவ குழுவினருடன் கலந்துரையாடினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம், சட்டப் பேரவை உறுப்பினர் மு. அப்துல் வகாப், சட்டப் பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x