Published : 24 May 2021 03:47 PM
Last Updated : 24 May 2021 03:47 PM

திருச்சியில் விரைவில் கார் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்; அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையைத் தொடங்கிவைத்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி

சென்னையில் உள்ளதுபோல் திருச்சி மாவட்டத்திலும் கார் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என, மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தோட்டக்கலை - வேளாண் வணிகம் - வேளாண்மை ஆகிய துறைகள் சார்பில், வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனைத் தொடக்க விழா இன்று (மே 24) நடைபெற்றது.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில், இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் வேறு எந்தப் பணியையும் பார்க்காமல், கரோனா தொற்றை ஒழிக்கும் பணியில்தான் ஈடுபட்டு வருகிறார். கரோனா நோயாளிகளுக்கென நாள்தோறும் புதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் 108 ஆம்புலன்ஸ் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், மாநகராட்சி மூலம் 250 கார்களை ஆம்புலன்ஸாக பயன்படுத்தும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மாவட்டத்திலும் கார் ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசுகையில், "பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கிலும் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் வார்டுக்கு 5 வாகனங்கள் வீதம் காய்கறி விற்பனை நடைபெறும். இந்த வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கூட்டுறவுத் துறை மூலம் தோட்டக்கலை - வேளாண் வணிகம், வேளாண்மை ஆகிய துறைகள் சார்பில், மாவட்டத்தில் 203 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. திருச்சி காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது. மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால்தான் கரோனா பரவலைக் குறைக்க முடியும். அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து, லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி மற்றும் கரோனா தடுப்பூசி இடும் பணியையும், தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமையும் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ-க்கள் அ.சவுந்தரபாண்டியன் (லால்குடி), எஸ்.ஸ்டாலின்குமார் (துறையூர் தனி), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), ந.தியாகராஜன் (முசிறி) மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம் கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x