Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

மாநிலங்களுக்கு 22 கோடி டோஸ் தடுப்பூசி விநியோகம்: 2 கோடி டோஸ் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தகவல்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை 22 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் கண்டுபிடித்து, புனே நகரின் சீரம் நிறுவனத்தில் தயாராகும் கோவிஷீல்டு, ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் ஆகிய 2 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை இலவசமாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுதவிர நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 19 கோடி டோஸுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை 21.8 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில், 22-ம் தேதி நிலவரப்படி 19.9 கோடி (வீணாவது உட்பட) டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 1.9 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் கையிருப்பு உள்ளன” என கூறப்பட்டுள்ளது.

உ.பி.யில் 3 லட்சம் சோதனை

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயலாளர் அலோக் குமார் நேற்று கூறும்போது, “மாநிலத்தில் கரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்படி, கடந்த வாரம் 3 புதிய ஆய்வகங்கள் செயல்படத் தொடங்கின. மேலும்12 ஆய்வகங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். சனிக்கிழமை 24 மணி நேரத்தில் 3.06 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆர்டி-பிசிஆர் முறையில் 1.3 லட்சம் சோதனை நடத்தப்பட்டது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும். இதுவரை 4.64 கோடி பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு சோதனை நடைபெறவில்லை” என்றார்.

நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உ.பி.உள்ளது. ஆனால் அங்கு கரோனாபரவல் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. உ.பி.யில் தீவிரமாக கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படுவ தால், சோதனையில் தொற்று உறுதி செய்யப்படுவது 1.9 சதவீதமாக் குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 6,046 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x