

சிவகங்கை திமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கேஆர்.பெரியகருப்பனின் தாயார் கருப்பாயி அம்மாள்(87) திருப்பத்தூரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று காலை 6 மணிக்கு அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான அரளிக்கோட்டை கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ரகுபதி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, கார்த்தி சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி மற்றும் தமிழரசி உள்ளிட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தாயை இழந்து வாடும் அமைச்சர் பெரியகருப்பன், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். கி.வீரமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.