Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

கரோனா தொற்றுக்கு கர்ப்பிணி மருத்துவர், நீதிபதி உயிரிழப்பு

கார்த்திகா

திருவண்ணாமலை / தஞ்சாவூர்

போளூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வசந்தம் நகரில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மனைவி மணியம்மாள். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள். இவர்களது மகள் கார்த்திகா(29). மருத்துவரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் கார்த்திக் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நீதிபதி கே.வனிதா(55). இவர், திருச்சியிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். பின்னர், மாற்றலாகி தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையிலுள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக கடந்த மே 5-ம் தேதி பொறுப்பேற்றார்.

பொறுப்பேற்ற நாளிலேயே தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, விடுப்பில் தூத்துக்குடிக்குச் சென்றார்.

அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீதிபதி வனிதா, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x