

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை அருகே வெளியூர் நபர்கள் வருவதைத் தடுக்க ஊர் எல்லையில் வேப்பிலை வேலி அமைத்து, காவல் காத்தும் வருகின்றனர்.
பிரான்மலை அருகே மதகுபட்டி, காந்திநகர் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த முறை தொற்று பாதிப்பு கிராங்களையும் விட்டு வைக்கவில்லை. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பலரும் கட்டுபாடின்றி சுற்றி வருகின்றனர்.
இதனால் தங்கள் கிராமத்தை காக்க தாங்களே பாதுகாக்க மதகுபட்டி, காந்திநகர் கிராமமக்கள் வேப்பிலை கட்டிய கயிற்றால் ஊர் எல்லை முழுவதும் வேலி அமைத்துள்ளனர்.
மேலும் அங்கேயே சுழற்சி முறையில் ஆட்களை நியமித்து காவல் காக்கின்றனர். வெளியூர்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்க வரும் வியாபாரிகளை தடுத்து சோப், கிருமிநாசினியால் கை கழுவ வைத்தபிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.