Published : 23 May 2021 06:33 PM
Last Updated : 23 May 2021 06:33 PM

சிவகங்கை மயானத்தில் உடலை தகனம் செய்ய நகராட்சி கட்டணம் போக ரூ.10 ஆயிரம் கேட்பதாக புகார்

சிவகங்கை

சிவகங்கை எரிவாயு தகன மேடையில் உடலை தகனம் செய்ய நகராட்சி கட்டணம் போக, கூடுதலாக ரூ.10 ஆயிரம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதற்கான அறிகுறியுடன் உள்ளோர் என 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினமும் கரோனா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் 25-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர்.

இறந்தவர்களை, ஒருசிலர் மட்டுமே தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்கின்றனர். பெரும்பாலானோர் மருத்துவமனை அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையிலேயே எரியூட்டுகின்றனர்.

இந்த எரியூட்டும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும் உடலை எரியூட்ட நகராட்சி கட்டணமாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர எரியூட்டும் ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக பணம் கொடுத்தால் மட்டுமே எரியூட்டுகின்றனர்.

கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் பிரேதங்களை காக்க வைக்கின்றனர். இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் வேறு வழியின்றி பணத்தை கொடுக்கும்நிலை உள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் அய்யப்பன் கூறுகையில், ‘‘ நகராட்சி கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது. மீறினால் தொண்டு நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x