Last Updated : 23 May, 2021 06:31 PM

 

Published : 23 May 2021 06:31 PM
Last Updated : 23 May 2021 06:31 PM

முழு ஊரடங்கு; காய்கறி, மளிகைப் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்ய ஏற்பாடு: ஒத்துழைப்பு அளிக்க அமைச்சர்கள் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி, தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை (மே 24) முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காவல் துறையினர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தளர்வில்லா ஊரடங்கை முறையாக செயல்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் சமூக நலன்- மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக சுமார் 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிதாக தொடர்ந்து கூடுதல் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் காய்கறி கடைகள், பழக்கடைகள், மளிகை கடைகள் வைத்துள்ளவர்கள் தள்ளுவண்டி மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்று விற்பனை செய்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்படவுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் காய்கறிகளின் விலைப்பட்டியல் அன்றாடம் வெளியிடப்படும்.

மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய செல்பவர்களுக்கும் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு வழங்கும் பணிகளில் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முறையாக செயல்படுத்திட வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லாமல் தளர்வில்லாத ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார் அவர்.

மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீன்கள் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தற்போது 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இந்த தடை காலத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் தடைக்கால நிவாரண தொகை ரூ.5000 வழங்க தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துவிட்டார். அந்த நிவாரண உதவித் தொகை நாளை அல்லது நாளை மறுதினம் முதல் மீனவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படும். கரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லாத முழு ஊரடங்கை முதல்வர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கரோனா பரவலை தடுக்க வேண்டும்” என்றார் அவர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ரவிசந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் அனிதா (கோவில்பட்டி), போஸ்கோராஜா (தூத்துக்குடி), தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் சுகந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x