ராணுவத்துக்கு எதிராகக் குரல்: மியான்மரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இடைநீக்கம்

ராணுவத்துக்கு எதிராகக் குரல்: மியான்மரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இடைநீக்கம்
Updated on
1 min read

மியான்மரில் ராணுவத்துக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ கடந்த மூன்று மாதங்களாக ராணுவத்துக்கு எதிராக, போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக சுமார் 1,25,000 பேர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தவே எடுக்கப்படுகின்றன. அனைவரையும் வேலையைவிட்டு நீக்கினால் பள்ளி அமைப்பே சிதைந்துவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் ராணுவம் வன்முறை

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மேலும், ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in