Published : 23 May 2021 02:13 PM
Last Updated : 23 May 2021 02:13 PM

ஊரடங்கு நாட்களில் வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை; காலை 6-லிருந்து 12 மணி வரை கிடைக்கும்: தமிழக அரசு அறிவிப்பு

கோப்புப் படம்

ஊரடங்கு நாட்களில் தமிழகம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அன்றாடம் 35,000 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகிவரும் நிலையில், கரோனா பரவல் சங்கிலியைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை (மே 24) முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் தொடங்கி இன்று இரவு 9 மணி வரை அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், வணிக வளாகங்கள் மட்டுமே இன்று இயங்கவில்லை.

இன்னும் ஒரு வாரத்திற்கு மளிகைக் கடைகள், காய்கறி அங்காடி கூட இருக்காது என்பதால், இன்று மக்கள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் குவிந்தனர்.

இதனைப் பயன்படுத்தி இன்று தக்காளி ஒரு கிலோ ரூ.100, கேரட் கால் கிலோ ரூ.50, ஒரு தேங்காய் ரூ.35 என அனைத்து காய்கறிகளும் பழங்களும் அநியாய விலைக்கு விற்கப்பட்டன.

இது தொடர்பாக மக்கள் தங்களின் குமுறல்களை வெளியிட்டனர். இந்நிலையில், காலையில் உணவுத் துறை அமைச்சர் கடும் எச்சரிக்கையை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 23.05.2021 அன்று கோவிட்19 முழு ஊரடங்கினை தொடர்ந்து பொது மக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் கே. கோபால், வேளாண்மை – உழவர் நலத்துறை இயக்குநர், வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் க.வீ. முரளிதரன், மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதன்படி, ஊரடங்கு நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் 1 மணி வரை வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரின் மேற்கொண்ட ஆலோசனையின்படி கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டிலுள்ள மக்கள் தொகை சுமார் 7 கோடி
* காய்கறி மற்றும் பழங்கள் தேவை தினந்தோறும் சுமார் 18,000 மெட்ரிக் டன் என எதிர்பாக்கப்படுகிறது.
* சென்னையை பொறுத்தவரை தினம் தோறும் 1500 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவைப்படும்.
* சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1160 மெட்ரிக் டன் அளவிற்கு
காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக்டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து
விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு எண்:
* தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை
பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில் தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத் துறை சார்ந்த அலுவலர்கள்
அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்:

*காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத் தொடரை மேலும் விரிவுபடுத்திட தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
* நின்சாகார்ட்,* வே கூல், * பழமுதிர் நிலையம், * தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் இணையம் * அஹிம்சா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றையும் ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

காய்,கனிகளை சேமித்து வைக்க நடவடிக்கை:

* தமிழகம் முழுவதும் 194 குளிர்பதன இடங்கள் 18,527 மெட்ரிக் டன் கொள்ளளவில் உள்ளன. அதில் தற்போழுது சுமார் 3000 மெட்ரிக் டன்
மட்டுமே விளை பொருட்கள் சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 15527 மெட்ரிக்டன் கொள்ளளவை அருகில் உள்ள விவசாயிகள்
தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்.

* உள்ளாட்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்கள்
விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களின் அன்றாட காய்கறிகள் மற்றும் பழங்கள் தேவையை பூர்த்தி செய்திட தமிழக முதல்வர் வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் விரிவான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x