Published : 23 May 2021 06:42 AM
Last Updated : 23 May 2021 06:42 AM

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு: போலீஸார் விசாரணையில் அம்பலம்

சென்னையில் நடந்த வழிப்பறி வழக்கில் கைதான நபருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை பெரியமேடு சென்ட்ரல் அருகே சுராஜ் என்ற நகை வியாபாரியிடம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் பணம், 282 கிராம் தங்க நகையை கடந்த 5-ம் தேதி இரண்டு மர்ம நபர்கள் வழிப்பறி செய்தனர். இந்த வழக்கில், யாசின் என்பவரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யாசினிடம் நடத்திய விசாரணையில் அவரது கூட்டாளி குறித்த தகவல் கிடைத்தது. அதை வைத்து ரபீக் என்பவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

கள்ள நோட்டுகள்

ரபீக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. பாகிஸ்தானில் இருந்து கள்ள நோட்டுகளை கொண்டு வந்து, தமிழகத்தில் புழக்கத்தில் விடும் ஏஜென்டாக ரபீக் செயல்பட்டதாகக் கூறி சிபிசிஐடி போலீஸார் ரபீக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், ரபீக் அல் உம்மா பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய நபர் எனவும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்றும் என்ஐஏ ரபீக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

என்ஐஏ மற்றும் சிபிசிஐடி போலீஸார் ரபீக்கை தேடிவந்த நிலையில் வழிப்பறி கொள்ளை வழக்கில் பெரியமேடு போலீஸார் ரபீக்கை கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ரபீக்கிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அவரை கைது செய்து, பின்னர் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x