மாதவரம், மணலியில் சித்த மருத்துவம் உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

மாதவரம், மணலியில் சித்த மருத்துவம் உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
Updated on
2 min read

சென்னை மாதவரம், மணலியில் மொத்தம் 365 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு முதல்வர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும், தேவையான அளவு ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-24, சூரப்பட்டு, வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 84 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையம், 86 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம், 95 படுக்கைகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மையம் (Covid Care Center) என மொத்தம் 265 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (22.05.2021) திறந்து வைத்தார்.

இந்த கரோனா சிகிச்சை மையத்தில் 86 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இங்கு தொற்று பாதித்த நோளாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டான்லி அரசு பொது மருத்துவமணையிலிருந்து மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மணலி மண்டலம், வார்டு-19ல் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் அமைந்துள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை இன்று திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்த கரோனா சிகிச்சை மையத்தில் 46 படுக்கைகளுக்கு ‘D’ வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 54 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இம்மையத்தில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க 125 KVA திறன் கொண்ட ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகள் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படுகின்றன. மேலும், கழிப்பறை வசதிகள், துப்புரவுப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சுதர்சனம், வடக்கு வட்டாரத் துணை ஆணையாளர் பி.ஆகாஷ், இ.ஆ.ப., மாதவரம் மண்டல கள ஒருங்கிணைப்பு அலுவலர் டி.மோகன், இ.ஆ.ப., உட்படப் பலர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in