Published : 22 May 2021 05:35 PM
Last Updated : 22 May 2021 05:35 PM

உரிகம் வனச்சரகத்தில் தொடரும் கோடை மழை: பசுமை திரும்பிய காப்புக்காடுகளில் வனவிலங்குகள் குதூகலம்

ஓசூர்

ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் தொடரும் கோடை மழை காரணமாக வனத்தில் நீர்நிலைகள் நிரம்பி, காடுகளில் பசுமை துளிர் விடுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குதூகலமாக வலம் வரத் தொடங்கியுள்ளன.

ஓசூர் வனக்கோட்டத்தின் கடைக்கோடியில் உள்ள உரிகம் வனச்சரகம், காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, பிலிக்கல், கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லள்ளி, உரிகம் உள்ளிட்ட 6 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. நடப்பாண்டு கோடைக் காலத்தின் ஆரம்பம் முதலே நிலவிய சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக இங்குள்ள காப்புக்காடுகளில் வறட்சி ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் தீக்கிரையாகி வந்தன.

இந்த காட்டுத் தீயில் இருந்து வனவிலங்குகள் மற்றும் மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட வனத்துறை சார்பில் தீயணைப்புத் துறையின் ஒத்துழைப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உரிகம் வனச்சரகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக வனத்தில் காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வறட்சியான காட்டுப் பகுதிகளில் மரம், செடி, கொடிகள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறும்போது, ''6 காப்புக்காடுகளிலும் கோடை மழை கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் வெப்பமான வறட்சித் தன்மை மாறி பசுமை திரும்பத் தொடங்கி உள்ளது. வனத்தில் உள்ள புல் பூண்டுகள், செடி, கொடிகள், மரங்கள் என அனைத்து வகைத் தாவரங்களும் துளிர் விட்டுப் பசுமைக்குத் திரும்பி வருகின்றன.

மேலும் உரிகம் காப்புக்காடுகளில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மழை நீர் நிரம்பி வனப்பகுதி, குளிர்ந்த தட்பவெப்ப நிலைக்கு மாறியுள்ளது. இதனால் இங்குள்ள யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குதூகலத்துடன் வலம் வரத் தொடங்கியுள்ளன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x