Published : 22 May 2021 11:54 AM
Last Updated : 22 May 2021 11:54 AM

ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

மே 24 ஆம் தேதியுடன் 2 வார ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், அதிகரித்து வரும் கரோனா தொற்று, இரண்டாம் அலை பரவலின் உச்சம், தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறையாதது போன்ற காரணங்களால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என முதல்வருடனான ஆலோசனையின் போது மருத்துவ நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் திடீரென உயரத்தொடங்கியது. தொற்று பரவலின் இரண்டாம் அலை அதிகரித்ததை அடுத்து படிப்படியாக உயர்ந்த தொற்று எண்ணிக்கை நாள் தோறும் 35000 -க்குமேல் பதிவாகிறது. உயிரிழப்பு தினமும் 300 க்கு மேல் உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவலை குறைக்க கட்டுபாடுகள் அமல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும் பொதுமக்கள் அலட்சியமாக வெளியில் நடமாடியதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து மே.10 அன்று முதல் 2 வார முழு ஊரடங்கை சில தளர்வுகளுடன் அரசு அமல்படுத்தியது. பின்னர் மே.14 அன்று ஊரடங்கில் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டது. ஆனாலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 35000 என்கிற எண்ணிக்கையை கடந்தே உள்ளது.

மே.24 ஆம் தேதியுடன் இருவார ஊரடங்கு முடிகிறது. இதையடுத்து நேற்று தொற்றுப்பரவல் அதிகம் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10-30 மணி அளவில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்குழு ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வலியுறுத்தியுள்ளது. தற்போதுள்ள நிலையில் 2 வார ஊரடங்கில் தொற்று குறையாததால் அடுத்து ஊரடங்கை நீட்டித்து அடுத்தக்கட்ட தொற்றுப்பரவல் நடவடிக்கையை தொடரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கருத்து பெரும்பான்மையான மருத்துவர்களின் கருத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவர் குழு பரிந்துரைத்துள்ளது. தனிமைப்படுத்துவதை தீவிரமாக கண்காணிப்பது, மேலும் அதிக அளவில் பரிசோதனைகள், தடுப்பூசியை விரைவுப்படுத்துவது, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் அத்யாவசியப் பணிகள் தவிர மற்ற அலுவலகங்களையும் மூடுவது, காய்கறி, மார்கெட்டுகளை மூடிவிட்டு நடமாடும் விற்பனைக் கடைகளை ஊக்குவித்து பொதுமக்கள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரைகளும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவர்கள் குழு பரிந்துரைக்குப்பின் தற்போது சட்டப்பேரவை குழுவுடன் முதல்வர் ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளார். ஆலோசனைக்குழுவின் 13 உறுப்பினர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x