

கரோனா தொற்றாளர்களிடையே அரிதாக ‘கருப்பு பூஞ்சை’ (மியூகோர் மைகோசிஸ்) என்னும் புதிய தொற்று பரவி வருகிறது. இந்த பூஞ்சை நோய் நமது உடலில் இயல்பாக உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்புத் திறனை தற்காலிகமாக குறைக்கிறது.
நம்மைச் சுற்றி காற்றிலும், அழுகிய பழங்கள், காய்கறிகளிலும் வாழும் இந்த கருப்பு பூஞ்சைகள் கண்கள், வாய் வழியாக உடலுக்குள் சென்று, நமது ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு திறனை குறைக்கின்றன.
‘கருப்பு பூஞ்சை’ கொடிய நோய் என்றாலும், அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றக்கூடிய நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல. கண்பார்வையை பறிப்பது மட்டுமின்றி, மூளைக்கும் வேகமாக பரவிஉயிரையும் பறிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நோயை எதிர்கொள்ள நடைமுறைப்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து விழுப்புரத்தில் உள்ள மருத்துவர் திருமாவளவன் கூறியதாவது:
‘கருப்பு பூஞ்சை’யை தடுக்க அனைத்து கோவிட் மருத்துவமனைகளும் நல்ல காற்றோட்ட வசதியுடன், ஈரப்பதம் இன்றி பேணப்பட வேண்டும். நாள்தோறும், உடனுக்குடன் திட,மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நாள்தோறும் நான்கு முறையாவது தேவையான கிருமிநாசினி கொண்டு அறை, கருவிகள், இருக்கைகள் சுத்தப்படுத்துதல் செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறோம்.
அனைத்து மருத்துவ மனைகளிலும் ஸ்டீராய்டு மருந்துகள் செலுத்த முறையான வழிமுறைகள் வகுக்க வேண்டு கிறோம். ஆக்சிஜன் இணைப்பு முகக் கருவியை அனைத்து நோயர்களுக்கும் புதிதாக பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
கருப்பு பூஞ்சை தொற்றாளர் களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அதற்கு பிரத்யேகமான கட்டிடத்தை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒதுக்க வேண்டுகிறோம்.
வயோதிகமான, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்புள்ள, ஏற்கெனவே ஸ்டீராய்டு மருந்து எடுத்த, நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நோயாளிகளை பட்டியலிட்டு, அவர்களை கண்காணிக்க வேண்டும்.
அவர்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான வழிமுறை கள் கடைபிடிக்கவும் உத்தரவிட வேண்டுகிறோம்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் முகக்கவசம் இலவசமாக முக்கியபொது இடங்களில் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் மக்களிடையே ‘கருப்பு பூஞ்சை’ பற்றிய விழிப்புணர்வு அரசு ஏற்படுத்த வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.