Last Updated : 21 May, 2021 07:53 PM

 

Published : 21 May 2021 07:53 PM
Last Updated : 21 May 2021 07:53 PM

ஆட்சிக்கு வந்த நாளைவிடவும் தமிழகத்தில் கரோனா இல்லாத நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

திருச்சி

ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கரோனாவைக் கட்டுப்படுத்தினால்தான் நாங்கள் உளப்பூர்வ மகிழ்ச்சி அடைவோம். கரோனா தொற்று யாருக்கும் இல்லை என்று கூறும் நாள்தான் மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

என்ஐடி வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சித்த மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கைப் பார்வையிட்டு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். அப்போது. சித்த மருத்துவத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. அதை முதல்வர் அருந்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

''தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த 2 வாரங்களில், 16, 938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 7,800 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. 30 இயற்கை மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 239 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 375 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் வெளிமாநிலங்களில் இருந்து 100 மெட்ரிக் டன் ஆக்சிஜனும் நாள்தோறும் பெறப்பட்டுள்ளது.

மேலும் புதிதாகப் பல்வேறு நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக 2,000 மருத்துவர்களும், 6,000 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக அமைந்துள்ள திமுக அரசு கரோனா தடுப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கரோனாவைக் கட்டுப்படுத்தினால்தான் நாங்கள் உளப்பூர்வ மகிழ்ச்சி அடைவோம். கரோனா தொற்று யாருக்கும் இல்லை என்று கூறும் நாள்தான் மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கும். பாசிட்டிவ் என்று சொல்லலாம். ஆனால், என்றைக்கு நெகட்டிவ் என்று சொல்லப்படுகிறதோ அன்றுதான் நான் முழு மகிழ்ச்சி அடைவேன்.

இந்த நேரத்தில் தனது உயிரைக் கொடுத்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அனைவருக்கும் அரசின் சார்பில் இதயபூர்வமான நன்றி''.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x