தொற்று பரவலைத் தடுக்க தேனி மருத்துவக்கல்லூரி கரோனா வார்டில் உதவியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்களை போலீஸார் வெளியேற்றினர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்களை போலீஸார் வெளியேற்றினர்.
Updated on
1 min read

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இங்குள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படும் இவர்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் உதவியாளராக இருந்து கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உதவியாளர்கள் பலரும் இந்த வார்டில் இருந்து வெளியில் சர்வசாதாரணமாக செல்வதுடன் அருகில் உள்ள கடைகளுக்கும் சென்று திரும்புகின்றனர்.

மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஓய்வாகப் பொழுதைப் போக்கிக் கொள்கின்றனர். இந்த இடம்பெயர்தலால் தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் உதவியாளர்களை அகற்ற முடிவு செய்தது.

இந்நிலையில் ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி கரோனா வார்டுகளை ஆய்வு செய்து, நோயாளிகளுடன் இருப்பவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின்பேரில் போலீஸார் கரோனா பாதுகாப்பு உடைஅணிந்து வார்டுகளில் உள்ள உதவியாளர்களை வெளியேற்றினர்.

தற்போது மருத்துவமனை ஊழியர்கள் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், உதவியாளர்கள் கரோனா விதிமுறைகளை சரிவரபின்பற்றுவதில்லை. இதனால் தொற்று பரவலாகும் நிலை ஏற்பட்டது. எனவே உதவியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in