Published : 21 May 2021 07:01 PM
Last Updated : 21 May 2021 07:01 PM

பிரசித்தி பெற்ற உதகை மலர்க் கண்காட்சி: கரோனாவால் இணையவழியில் தொடங்கியது

உதகை

பிரசித்தி பெற்ற உதகை மலர்க் காட்சியை கரோனா பரவல் காரணமாக மக்கள் நேரடியாகக் காண முடியாததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைய வழி மலர்க் காட்சியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாக உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி மற்றும் படகு அலங்காரப் போட்டி எனப் பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

கோடை விழாவைக் காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் சமவெளிப் பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்வர். தோட்டக்கலைத் துறையின் சார்பில் 5 நாட்கள் நடைபெறும் இந்த மலர்க் காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கக் கூடியதாக இருக்கும்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாகப் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால், மலர்க் காட்சி நடத்துவது சாத்தியமாகவில்லை. நடப்பாண்டு மலர்க் காட்சிக்காக கடந்த 6 மாதங்களாக தோட்டக்கலைத் துறையினர் பூங்காவைத் தயார்படுத்தி வந்தனர். சுமார் 5 லட்சம் பல்வேறு ரக மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு, 30,000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளும் தயார் செய்யப்பட்டன.

இந்நிலையில், கரோனா காரணமாக மலர்க் காட்சியை நடத்த முடியாத நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள லட்சக்கணக்கான மலர்களை இணையதளம் வழியாகக் காண மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக் கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதையடுத்து ‘Botanical Garden 2021’ என்ற இணையவழி மலர்க் காட்சியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ’’பிரசித்தி பெற்ற உதகை மலர்க் காட்சி கோவிட்-19 காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருந்த மலர்க் காட்சி கரோனா பெருந்தொற்றால் நேரடியாக நடத்தப்படாமல் இணையம் மூலம் நடைபெறுகிறது.

கண்காட்சியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவிட் -19 தடுப்பூசி போடுங்கள் என்ற வாசகம் மலர்த் தொட்டிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்கவர் மலர்த் தொட்டிகள் மிகவும் எளிய முறையில் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. மலர்கள் மற்றும் அலங்காரத்தைப் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், இணைய வழி மற்றும் சமூக ஊடகம் மூலம் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது’’ என்று வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், கூடலூர் எம்எல்ஏ பொன்ஜெயசீலன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷிப்ளாமேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x