தமிழக மீனவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்படும்: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கிடம், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி. ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திமுக தலைமை அலுவலகம் இன்று (மே 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள் லட்சத்தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதை அடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16-ம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இன்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது, மத்திய அமைச்சர் உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து தேடுல் பணியை துரிதப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வரிடம் தெரிவிக்குமாறும் டி.ஆர்.பாலு-விடம் கூறியுள்ளார்".
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
