Published : 21 May 2021 04:02 PM
Last Updated : 21 May 2021 04:02 PM

ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் உயிரிழப்பு என புகார்; அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

கடலூரில் வேறு ஒரு நோயாளிக்கு செலுத்துவதற்காக ஆக்சிஜன் குழாயை அகற்றியதால், கணவர் உயிரிழந்துவிட்டதாக, மனைவி புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 21) வெளியிட்ட அறிக்கை:

"கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று சந்தேகத்தின் பேரில் ராஜா (வயது 49) என்பவர், 05.05.2021 அன்று அனுமதிக்கப்பட்டார். அவரின் நுரையீரல் பாதிப்பு 80% முதல் 90% என்று CT Chest இல் தெரியவந்தது. அவருக்கு 08.05.2021 அன்று ஆர்.டி-பி.சி.ஆர் எடுத்தபோது, 'நெகட்டிவ்' என்று அறிக்கை வந்தது. நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தமையால் அனுமதித்த நாள் முதல் NRM மாஸ்க் மூலம் ஆக்சிஜன் ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 15 லிட்டர் வரை அவருக்கு செலுத்தப்பட்டு வந்தது.

18.05.2021 அன்று காலை நோயாளியின் ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு 60% இருந்ததால், அவருக்கு HFNO முறையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. 19.05.2021 அன்று காலை ஆக்சிஜன் தேவை அதிகமானதால் C-PAP என்னும் முறைக்கு மாற்றப்பட்டார். அவ்வாறு மாற்றிய உடன் நோயாளியின் ஆக்சிஜன் அளவு 78% முதல் 80% வரை இருந்தது.

20.05.2021 அன்று நோயாளி ராஜா காலை உணவு சாப்பிடுவதற்காக, ஆக்சிஜன் செலுத்தும் முகக்கவசத்தை தாமாகவே நீக்கிவிட்டு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதே நேரத்தில், தனியார் மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட 40 வயதுடைய மணிகண்டன் என்ற நோயாளி 30% மட்டுமே ஆக்சிஜன் நுரையீரல் நிறைவின் அளவு இருந்த நிலையில், புதியதாக அனுமதிக்கப்பட்டதால் உடனே வளாகத்தில் இருந்த மருத்துவக் குழு சிகிச்சை அளிக்க விரைந்தது.

அவருக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளை தயார் செய்துகொண்டிருந்தது. நோயாளி மணிகண்டனுக்கும் ஆக்சிஜன் தேவைப்பட்டதால், தரைதளத்தில் இருந்த CPAP Machine Oxygen Pin பொருத்த முயற்சி செய்யப்பட்டு அது பொருந்தாமையால் நோயாளியின் உயிர் காக்கும் பொருட்டு முதல் தளத்தில் உள்ள CPAP Machine கீழ்தளத்திற்கு பொருந்தும் என்பதால் கவலைக்கிடமான இருந்த மணிகண்டன் என்ற நோயாளியை காப்பாற்றும் பொருட்டு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக தரைத்தளத்தில் இருந்த CPAP Machine-ஐ முதல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நோயாளி ராஜா அருகில் இருந்த ஆக்சிஜன் பின்-ஐ பொருத்தி தயார் நிலையில் வைத்துவிட்டு, பின்பு அவர் அருகில் இருந்த CPAP Machine-ஐ நோயாளி ராஜா உணவு அருந்திகொண்டிருந்ததாலும், தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததாலும் CPAP Machine-ஐ மாற்றி கீழ்தளத்தில் இருக்கும் நோயாளி மணிகண்டனை காப்பாற்றிவிடலாம் என்று மருத்துவக் குழு விரைந்து செயல்பட்டது.

முதல் தளத்திலிருந்து கொண்டு வந்த CPAP Machine Oxygen Pin கீழ் தளத்தில் பொருந்தியதால், நோயாளி மணிகண்டனுக்கு ஆக்சிஜன் உடனே செலுத்தப்பட்டது. பின்பு அவர் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதேவேளையில், முதல் தளத்தில் உள்ள நோயாளி ராஜாவிற்கு CPAP Machine-ஐ கண்காணிக்க மருத்துவர்கள் விரைந்தபோது அவர் தொடர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தார். அவருக்கான மாற்றம் செய்யப்பட்ட CPAP Machine சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையிலேயே தான் இருந்தது.

தொடர்ந்து உணவு அருந்தி கொண்டிருக்கும்பொழுது திடீர் என்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. பின்பு மருத்துவர்கள் இயன்ற சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நோயாளி ராஜா உயிரிழந்தார்.

இத்தகவல் தெரிந்தவுடன் தமிழக முதல்வரின் உத்தரவின்படி இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x