Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM

அறநிலையத் துறையின் அன்னதான திட்டத்தில் அனைத்து நோயாளிகளுக்கும் மதிய உணவு: அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தல்

சென்னை

இந்து சமய அறநிலையத் துறையின் அன்னதானத் திட்டத்தின் கீழ் கோயில்களில் தயாராகி, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மதிய உணவு பொட்டலங்களை கரோனா நோயாளிகள்,அவர்களது உதவியாளர்கள் மட்டுமின்றி, பிற நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் அன்னதானம் திட்டத்தின் கீழ் கோயில்களில்தயாரிக்கப்பட்டு, மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில்நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உணவு பொட்டலம் வழங்கும் திட்டத்தை, தொடர்ந்துசெயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 754 கோயில்களில் அன்னதானத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தி அரசுமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு கடந்த 12-ம் தேதி முதல் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா பாதிப்பு குறையும் வரை, சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு தேவைக்கேற்ப உணவு பொட்டலங்களை உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்து, அதன்படி தினசரி 1 லட்சம் பயனாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், கோயில் அன்னதானத் திட்டத்தைகரோனா ஊரடங்கு காலம்வரை தொடர்ந்து செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், நோய் தொற்று உள்ளவர்கள், அவர்களது உதவியாளர்கள் மட்டுமின்றி பிற நோயாளிகளுக்கும் உணவு வழங்குமாறு அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

754 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x