Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சியின் முக்கியமான நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்கிறார்.

இதற்கிடையே, அவர் உடல்நலக் குறைவால், மணப்பாக்கத்தில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு மருத்துவ குழுவினர் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், “விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, பரிசோதனைகள் முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்” என தேமுதிக தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே, விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினார். இருப்பினும், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் வந்து சந்திப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x