Published : 20 May 2021 07:25 PM
Last Updated : 20 May 2021 07:25 PM

கரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா தொடர்பான தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசு இணையதளங்களிலும், ஸ்டாப் கரோனா இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் அரசின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை வெளியிடுவதற்காகத் தமிழக அரசின் இணையதளம் உள்ளது.

கரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட ஸ்டாப் கரோனா என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை.

2021ஆம் ஆண்டு தொடங்கியது முதல் மே 12ஆம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும், இதுவரை ஐந்து அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்த அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. கரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.

அதனால் கரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து என்பது குறித்து பிற்பகலில் தலைமை நீதிபதி அமர்வில் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைத்தது.

பிற்பகல் இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 18ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கரோனா தொடர்பான அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகளை அரசின் இணையதளங்களிலும், ஸ்டாப் கரோனா இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x