Last Updated : 20 May, 2021 06:37 PM

 

Published : 20 May 2021 06:37 PM
Last Updated : 20 May 2021 06:37 PM

புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பதில் தாமதம்: கரோனா பாதிப்பால் தவிப்பில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் கரோனாவால் பொதுமக்கள் கடும் பாதிப்பில் உள்ளதால், புதிய அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. அத்துடன் தொற்று பாதிப்பும் உச்சத்திலேயே உள்ளது. புதுச்சேரியில் தேர்தல் முடிந்து என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அணி வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் முதல்வராக ரங்கசாமி மட்டும் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார்.

அதையடுத்து 9-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமாகி வீடு திரும்பியுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். புதிய அமைச்சரவையும் பதவியேற்காமல் உள்ளதால் மக்கள் பாதிப்பில் உள்ளனர்.

ஆளுநர் தமிழிசை, சுகாதாரத்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் அதிகாரிகள் கரோனா பணிக்கு முக்கியத்துவம் தந்து பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் ஊரடங்கு கால நிவாரணம் தமிழகம் போல் ஏதும் இல்லாமல் சிறிய ஊரான புதுச்சேரியில் மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்வதில்லை. கரோனாவால் பணியில்லை, மறுபக்கம் பட்டினிக் கொடுமை என்ற சூழலே புதுச்சேரியில் உள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பணிகளைச் செய்யத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியிலோ அரசு அமையாததால் மக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். முக்கியமாக சுகாதாரத் துறைக்காவது அமைச்சர் நியமித்தாவது பணிகளை புதிய அரசு விரைவுபடுத்தலாம் என்று பலரும் பேசுகின்றனர்.

மக்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் மக்களால் தேர்வான அரசு உருவானால்தான் அவர்களிடம் உரிமையாகக் குறைகளைத் தெரிவித்துப் பணிகளைச் செய்ய முடியும். ஆனால் அதிகாரிகள், ஆளுநர் தரப்பில் மக்களுக்கு தேவையான நிவாரணம், அனைத்து கார்டுகளுக்கும் அரிசி, மளிகை பொருட்கள் போன்ற முக்கிய அடிப்படைப் பிரச்சினையான உணவு தீர்வுக்கு முன்னுரிமை தருவதில்லை. புதுச்சேரியில் பல ஏழை மக்களும் மஞ்சள் அட்டை கார்டு வைத்திருந்து, சாப்பிட அரிசிகூட கிடைக்காமல் இருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டனர்.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் கரோனாவால் இரு பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே சிகிச்சை தொடர்பாக உயர் பதவியில் உள்ளோரிடம் தெரிவித்தும் அவர்கள் போதிய அளவு கவனம் செலுத்தவே இல்லை. மக்களின் நிலையை இதன் மூலமே உணரலாம்" என்று நேரடியாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

சில முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகள் செயல்பாடு மோசமாக உள்ளதுடன் மக்கள் தொலைபேசியில் புகார் தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. பல புகார்கள் முதல்வர் தரப்புக்கே நேரடியாகச் செல்வதால் விரைவில் இலாக்கா மாற்றம் நடக்கவுள்ளது என்று அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x