Published : 20 May 2021 06:30 PM
Last Updated : 20 May 2021 06:30 PM

ஊரடங்கில் உணவின்றி வாடும் விலங்குகளுக்கு உணவு வழங்குவது குறித்து நடைமுறை வகுக்க குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவிக்கும் தெருநாய்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது குறித்த நடைமுறைகளை வகுப்பது தொடர்பாகக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டாலும் மறுபுறம் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்களை நம்பி வாழும் நாய், பூனை போன்ற தெருவிலங்குகளே. கடைகள், உணவு விடுதிகள் பூட்டப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதால் தெருவிலங்குகள் உணவின்றித் தவிக்கும் நிலை உள்ளது.

இவற்றுக்கு உணவு வைக்கும் தன்னார்வலர்களும் போலீஸ் கெடுபிடி காரணமாக உணவு வைக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது.

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருநாய்கள், விலங்குகள், உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதர்ஸ் ஆஃப் அனிமல்ஸ் அறக்கட்டளையின் தலைவரான வி.இ.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் தெருநாய்கள், விலங்குகள், உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தெருநாய்கள் மற்றும் விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம் என்பது குறித்த யோசனைகளைத் தெரிவிக்கும்படி மனுதாரர் தரப்புக்கும், அரசுத் தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை மே 20 (இன்று) ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெரு விலங்குகளுக்கு உணவளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாகவும், கால்நடைத் துறையுடன் இணைந்து செயல்பட அந்நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தெரு விலங்குகளுக்கு உணவளிக்கச் செல்பவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்துவதாகக் கூறப்படுகிறது எனவும், கடற்கரையில் உலவும் குதிரைகளுக்கும் உணவளிக்க வேண்டும் எனவும், இதற்கு மாநில விலங்குகள் நல வாரியமும், கால்நடைத் துறையும் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவண் கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதையடுத்து, தெருநாய்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது குறித்த நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக தமிழக கால்நடைத்துறை கூடுதல் இயக்குனர் அருணாச்சல கனி, ப்ளூ கிராஸ் பிரதிநிதி, வழக்கறிஞர் யோகேஸ்வரன், விலங்குகள் ஆர்வலர் ஷ்ரவண் கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தக் குழு நாளை கூடி, இது சம்பந்தமாக ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிப் பரிந்துரைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x