சிவகங்கையில் ஒரே ஒரு தகன மேடை: எரியூட்ட முடியாமல் மருத்துவமனையிலேயே தேங்கும் சடலங்கள்

சிவகங்கையில் ஒரே ஒரு தகன மேடை: எரியூட்ட முடியாமல் மருத்துவமனையிலேயே தேங்கும் சடலங்கள்
Updated on
1 min read

சிவகங்கையில் ஒரே ஒரு எரிவாயு தகன மேடை மட்டுமே இருப்பதால் எரியூட்ட முடியாமல் மருத்துவமனையிலேயே பிரேதங்கள் தேங்கி கிடக்கின்றன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதற்கான அறிகுறியுடன் உள்ளோர் என 650-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தினமும் கரோனா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் 20-க்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர்.

இறந்தவர்களை, ஒருசிலர் மட்டுமே தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்கின்றனர். பெரும்பாலானோர் மருத்துவமனை அருகேயுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையிலேயே எரியூட்டுகின்றனர்.

இங்குள்ள ஊழியர்கள் ஒரு நாளுக்கு 15 உடல்களை மட்டுமே தொடர்ந்து எரியூட்டுகின்றனர்.

அதற்கு மேல் தங்களால் பிரேதங்களை எரியூட்ட முடியாது எனக் கைவிரித்து விடுகின்றனர். இதனால் பிரேதங்கள் மருத்துவமனையிலேயே தேங்கும்நிலை உள்ளது.

சில சமயங்களில் பிரேதங்கள் எரிவாயு தகன மேடை வளாகத்தில் வைக்கப்படுகின்றன. இதனால் கூடுதலாக எரிவாயு (அ) மின்சார தகன மேடை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மயானத்தில் விறகு வைத்து எரிக்கும் வகையில் ஒரு மேடை உள்ளது.

அதில் ஒரு நாளுக்கு 2 (அ) 3 பிரேதங்களுக்கு மேல் எரியூட்ட முடியாது. இதனால் அந்த மயானத்தில் எரிவாயு (அ) மின்சார தகன மேடை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in