Published : 20 May 2021 02:27 PM
Last Updated : 20 May 2021 02:27 PM

இ-பதிவு செய்வது எப்படி?-  சந்தேகங்களுக்கு உதவி எண் அறிமுகம்

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, சென்னைக்குள்ளேயே பயணிக்க இ-பதிவு அவசியம். இதுகுறித்துப் பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களுக்கு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த சந்தேகங்களுக்கான புதிய வழிகாட்டும் உதவி எண்ணைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக தினமும் 33,000-ஐத் தாண்டி தொற்று எண்ணிக்கை பதிவாகிறது. உயிரிழப்பு தினமும் 300 என்கிற எண்ணிக்கைக்கு மேல் பதிவாகிறது.

நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால், பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்காமல், தனி நபர் இடைவெளி இல்லாமல் பயணிப்பதும், பொது இடங்களில் கூடுவதும் அதிகரித்தது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் பயனில்லாததால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர் அதில் சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவந்தது. மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பதிவு முறையைக் கொண்டுவந்தது. திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவம் சார்ந்த பயணம் எனச் சில காரணங்களுக்காக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனிடையே சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 348 பகுதிகளாகப் பிரித்து இ-பதிவு உள்ளவர்கள் மட்டுமே ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்குச் செல்ல முடியும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு இ-பதிவு செய்யாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இ-பதிவு குறித்துப் பொதுமக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இ-பதிவிலும் திருமணம் என்கிற பகுதி அடிக்கடி நீக்கப்பட்டும், சேர்க்கப்பட்டும் வருகிறது. நேற்று திருமணம் குறித்த புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டது. இதுகுறித்த பொதுமக்களின் சந்தேகங்கள் ஏராளமாக உள்ளன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அரசு சார்பில் ஹெல்ப் லைன் பகுதி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான உதவி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

“பொதுமக்கள் இ-பதிவு (e-registration) குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்குக் கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம்” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x