Published : 20 May 2021 01:09 PM
Last Updated : 20 May 2021 01:09 PM

கட்டுக்கடங்கா கரோனா; ஊரடங்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வி: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை

ஊரடங்கைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஊரடங்கை உறுதியாகச் செயல்படுத்த விடாமல் தமிழக அரசைத் தடுக்கும் சக்தி எது எனத் தெரியவில்லை. ஊரடங்கு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை நேற்று 1,816 அதிகரித்து, 34,875 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாகப் பகுதி நேர ஊரடங்கும், 11 நாட்களாக முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்தும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுவது குறித்த சந்தேகங்களைத்தான் ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 16ஆம் தேதி முதல் குறையத் தொடங்கியது. 16ஆம் தேதி 477, 17ஆம் தேதி 106, 18ஆம் தேதி 16 என்ற விகிதத்தில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால், கரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை எழுந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1,816 அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி கரோனா தொற்று ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடந்த 10 நாட்களில் இதுதான் முதல் முறையாகும். கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பயனளிக்கும் வகையில் உறுதியாகவும், கடுமையாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று 35 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், தினசரி கரோனா வைரஸ் பாதிப்பில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலிடத்தில் உள்ளது. இது பெருமைப்படுவதற்கான செய்தியல்ல. மாறாக அச்சமும், வேதனையும் படவேண்டிய விஷயமாகும்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அதே மே 10ஆம் தேதிதான் கர்நாடகத்திலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. கேரளத்தில் அதற்கு இரு நாட்கள் முன்பாக மே 8ஆம் தேதி முழு ஊரடங்கு செயல்பாட்டுக்கு வந்தது. கர்நாடகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் தினசரி பாதிப்பு 47,930 ஆக இருந்தது. நேற்று அந்த எண்ணிக்கை 34,281 ஆகக் குறைந்துவிட்டது.

அதேபோல், கேரளத்திலும் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்ததை விட மூன்றில் இரு பங்காக இப்போது குறைந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 10ஆம் தேதி 28,978 ஆக இருந்த தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது சுமார் 6 ஆயிரம் அதிகரித்துள்ளது.

அண்டை மாநிலங்களில் ஊரடங்கு காலத்தில் கரோனா எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருவதிலிருந்தே ஊரடங்கு விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை ஐயமின்றி உணர்ந்துகொள்ள முடியும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு பயனுள்ள நடவடிக்கை என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. சென்னையில் தொடங்கி தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அவற்றைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை நாள்தோறும் நான் சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழக அரசும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்படுவதாக தினமும் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், களத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் உண்மையாகும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தாலும், மாவட்டத்திற்குள் செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் இ-பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் காவல்துறையும் அறிவித்துள்ளன. ஆனால், நேற்று எனது நண்பர் ஒருவர் கள்ளக்குறிச்சியில் புறப்பட்டு விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கடந்து சென்னைக்குச் சென்றிருக்கிறார்.

இடையில் எந்த இடத்திலும் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்படவில்லையாம். சென்னையிலும் எந்த சாலையிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் அணிவகுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த அளவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்னும் எத்தனை வாரங்கள் ஆனாலும் கரோனா கட்டுக்குள் வராது.

ஊரடங்கு என்பது அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வர முடியாத நிலையை உருவாக்குவதுதான். அத்தகைய ஊரடங்கைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஊரடங்கை உறுதியாகச் செயல்படுத்த விடாமல் தமிழக அரசைத் தடுக்கும் சக்தி எது எனத் தெரியவில்லை. ஊரடங்கு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்தும்.

கரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தேவைப்பட்டால் துணை ராணுவத்தை அழைக்க வேண்டும். அதன்மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x