Published : 20 May 2021 12:50 PM
Last Updated : 20 May 2021 12:50 PM

மகுடஞ்சாவடியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் உருக்காலை வளாகத்தில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார்.

பின், திருப்பூர் செல்லும் வழியில், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேர அவசர மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும், கரோனா தடுப்பூசி அளிப்பது குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், முதல்வர், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x