

பத்திரிகையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பயணிக்கலாம். அவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்று டிஜிபிஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், மாவட்டங்களுக்குள் பயணிக்கவும் இ-பதிவு அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் வாகனங்களில் செல்ல இ-பதிவு தேவையில்லை என்று அரசு அறிவித்துஇருந்தது. ஆனால், போலீஸார் சோதனையின்போது பத்திரிகையாளர்களிடமும் இ-பதிவு ஆவணங்களைக் கேட்டு வற்புறுத்தினர். இதுகுறித்து புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பத்திரிகையாளர்கள், அவர்களுடைய அலுவலக அடையாள அட்டை, தமிழக அரசின் அடையாள அட்டை, பிரஸ் கிளப்அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்துகொள்ளலாம். இ-பதிவு தேவையில்லை” என்று அறிவித்துள்ளார்.