கரோனாவுக்கு தவறான சிகிச்சை 2 மருத்துவர்கள் மீது வழக்கு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராமன், கரோனா சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சென்னை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மே 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திண்டிவனம் மருத்துவமனையில் போலி ரெம்டெசிவிர் மருந்து கொடுத்ததால்தான் தன் சகோதரர் ராமன் உயிரிழந்தார் என அவரது சகோதரர் பிரதாப், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இதைத் தொடர்ந்து திண்டிவனத்தில் கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த அந்த தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாநில பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம் தலைமையிலான சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இம்மருத்துவமனையில் புதிதாக கரோனா தொற்றாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று தடை விதித்தனர்.

இந்நிலையில் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா திண்டிவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் இம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சுரேஷ், பிரசாத் மற்றும் சுரேஷின் கார் ஓட்டுநர் சிவக்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே இம்மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீஸார்அவர்களை சமாதானம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in