

மதுரையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரபடுத்துப்படும், ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவியேற்றுக் கொண்ட அனிஷ் சேகர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தின் 216வது ஆட்சியராக மருத்துவர் அனிஷ் சேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர் மருத்துவர் என்பதும் , மதுரை மாநகராட்சி ஆணையராக ஏற்கெனவே பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனிஷ் சேகர், "ஏற்கெனவே மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணிபுரிந்துள்ளதால் மதுரை மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவேன்.
மதுரையில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரபடுத்தப்படும். அப்பணிகளை ஆராய்ந்து செயல்படுத்துவோம்.
மேலும், கரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதை பின்பற்றுகிறோம்.
கரோனா சிகிச்சையில் ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளதால் அதனை உரிய முறையில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். ஆக்சிஜனை உடனுக்குடன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்த்தால் மட்டுமே கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படும்.