Published : 19 May 2021 03:12 PM
Last Updated : 19 May 2021 03:12 PM

சிதம்பரம் மடத்துக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு; எடுத்த நடவடிக்கை என்ன? ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை

சிதம்பரம் குரு நமச்சிவாய மூர்த்தி மடத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள குரு நமச்சிவாய மூர்த்தி மடத்துக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான சொத்துக்கள் உள்ளதாகவும், இந்த சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஆக்கிரமிப்புகள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டு முதல் அரசுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளேன், ஆனால் நடவடிக்கை இல்லை, மனு மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்”. என மனுதாரர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், “ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுக்களை பரிசீலித்து வருகிறோம். ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது, இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்கிறோம்”. எனத் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் இந்து சமய அறநிலைய துறையின் விழுப்புரம் இணை ஆணையரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலைய துறைக்கும், மடத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறநிலையத் துறை அதிகாரிகளிடம் விவரங்களைப் பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8 -ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x