ஊரடங்கால் உணவின்றி வாடும் தெருவிலங்குகளுக்கு எப்படி உணவு வழங்கப்படும்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

ஊரடங்கால் உணவின்றி வாடும் தெருவிலங்குகளுக்கு எப்படி உணவு வழங்கப்படும்?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

கரோனா ஊரடங்கால் உணவில்லாமல் தவிக்கும் தெருவிலங்குகளுக்கு எப்படி உணவு வழங்குவது என்ற யோசனைகளை வழங்க தமிழக அரசுக்கும், மனுதாரருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் ஒருபக்கம் பாதிக்கப்பட்டாலும் மறுபுறம் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்களை நம்பி வாழும் நாய், பூனை போன்ற தெருவிலங்குகளே. கடைகள், உணவு விடுதிகள் பூட்டப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதால் தெருவிலங்குகள் உணவின்றித் தவிக்கும் நிலை உள்ளது.

இவற்றுக்கு உணவு வைக்கும் தன்னார்வலர்களும் போலீஸ் கெடுபிடி காரணமாக உணவு வைக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது.

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருநாய்கள், விலங்குகள், உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதர்ஸ் ஆஃப் அனிமல்ஸ் அறக்கட்டளையின் தலைவரான வி.இ.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கு காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் தெருநாய்கள், விலங்குகள், உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகி இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தெருநாய்கள் மற்றும் விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம் என்பது குறித்த யோசனைகளைத் தெரிவிக்கும்படி மனுதாரர் தரப்புக்கும், அரசுத் தரப்புக்கும் அறிவுறுத்தி, விசாரணையை நாளைக்கு (மே 20) ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in