Last Updated : 19 May, 2021 02:18 PM

 

Published : 19 May 2021 02:18 PM
Last Updated : 19 May 2021 02:18 PM

பேராவூரணி அருகே சோகம்: அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட முயன்ற குழந்தையைக் காப்பாற்றிய தந்தை பலி

பேராவூரணி அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியைத் தொட முயன்ற குழந்தையைக் காப்பாற்றிய தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராசேந்திரன் - இந்திரா தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது மகன் கதிர்வேல் (32), பொறியியல் பட்டதாரி. இவர், சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார். தற்போது கரோனா காலமாக இருப்பதால், வீட்டில் இருந்து நிறுவனப் பணிகளைச் செய்து வந்தார்.

இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு 2 வயதில் அன்புச் செல்வன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவரது வீட்டின் அருகில் உயர் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்நிலையில், இன்று (மே 19) புதன்கிழமை, காலை 6 மணியளவில் மின்கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது.

குழந்தை அன்புச் செல்வன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் மீது மின்கம்பி பட்டது. இதையடுத்து, ஓடிச் சென்று குழந்தையைக் காப்பாற்ற முயன்ற கதிர்வேல், மின்சாரம் தாக்கி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தை அன்புச் செல்வன் தீக்காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பைத் துண்டித்து மின்கம்பியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பேராவூரணி காவல் ஆய்வாளர் வசந்தா, வருவாய்த் துறையினர் நேரில் வந்து நடந்த விவரங்களைக் கேட்டறிந்தனர்.

பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உயர் அழுத்த மின்கம்பிகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அது பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த வாரமும் இதே பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. மின்சாரத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக மின்கம்பிகளை மாற்றித் தரக் கேட்டுக்கொண்டுள்ளேன். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி பெற்றுத் தரப்படும்" என்று எம்எல்ஏ அசோக்குமார் தெரிவித்தார்.

மின்கம்பி அருகில் நின்று கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றிவிட்டு, பொறியாளரான தந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x