Published : 19 May 2021 01:39 PM
Last Updated : 19 May 2021 01:39 PM

தென்மேற்குப் பருவமழை மே.21-ல் தொடங்குகிறது; மே.22-ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை மே 21 முதல் தொடங்குகிறது. வங்கக் கடலில் மே 22 அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வெப்பச் சலனம் காரணமாக மே 19, 20 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மே 21 அன்று மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மே 22, 23 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழக மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:

உதகமண்டலம் (நீலகிரி) 4 செ.மீ., கிருஷ்ணராயபுரம் (கரூர்) 3 செ.மீ., பேரையூர் (மதுரை) நிலக்கோட்டை (திண்டுக்கல்) தென்பரநாடு (திருச்சி) கழட்டி (நீலகிரி) 2 செ.மீ., குழித்துறை (கன்னியாகுமரி) அவலாஞ்சி (நீலகிரி) மாயனூர் (கரூர்) ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) புலிவளம் (திருச்சி) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மே 22, 23 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு

தமிழக கடலோரப் பகுதி குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை மே 19 இரவு 11.30 மணி வரை கடல் அலை 2 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். மீனவர்கள் இப்பகுதியில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்மேற்குப் பருவமழை:

தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் மே 21 அன்று தொடங்க வாய்ப்பு உள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் மே 22 அன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x